villivakam 10rs doctor mohan reddy : ஏழை மக்களிடம் வெறும் 10 ரூபாய்க்கு மருத்துவ சேவை புரிந்த வந்த டாக்டர் மோகன் ரெட்டி மரணமடைந்தார். அவரின் மறைவு வில்லிவாக்கம் பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேவைகளில் சிறந்த சேவை மருத்துவம் என்பார்கள். அப்படி சொன்னால் அது மிகையும் அல்ல. ஒரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கடவுளுக்கு அடுத்தப்படியாக மருத்துவர்களிடமே உள்ளது. அதனால் தான் உயிரை காப்பாற்றும் மருத்துவரை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மட்டுமில்லை கடவுளாகவே பார்க்கிறார்கள்.
இன்றைய காலத்தில் எத்தனை டாக்டர்கள் மருத்துவத்தை வியாபாரமாக பார்க்காமல் சேவையாக செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி செய்தால் அவர்களுக்கு மக்கள் தரும் அங்கீகாரம் எப்படி இருக்கும் என்பதை இன்றைய தினம் அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள்.
மருத்துவத்தை தனது உயிர் நாடியாக நினைத்து வெறும் 10 ரூபாய்க்கு ஏழை நோயாளிகளுக்கு சிகிக்சை பார்த்து வந்த டாக்டர் மோகன் ரெட்டி (84) கொரோனாவால் மீண்டாலும் திடீரென காலமானார்.கொரோனா தொற்றுநோய் காலத்திலும் மக்களுக்கு இவர் ஆற்றிய சேவை மகத்தானது.
ரூ.10 டாக்டர் மோகன் ரெட்டி சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மிகவும் பிரபலமானவர். இவர் இந்த பகுதியில் ரூ.10 க்கு மருத்துவம் பார்த்து வந்தார். கொரோனா தொற்று நேரத்திலும் இவருடைய மருத்துவமனை செயல்பட்டது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் மோகன் ரெட்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையின் பலனாக கொரோனாவில் இருந்து மீண்டார்.
மீண்டும் மருத்துவசேவையை தொடங்க காத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் மோகன் ரெட்டி எதிர்பாராத விதமாக சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்ததாக அவரின் சகோதரர் எம்.கே. ரெட்டி தெரிவித்துள்ளார்.
டாக்டர் மோகன் ரெட்டியின் மரணம், வில்லிவாக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 1936ம் ஆண்டு நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி, ஆரம்பக் கல்வியை குடூரில் பயின்றார். பின்பு, மேல்படிப்பை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் தொடர்ந்தார். மருத்துவராக பட்டம் பெற்ற பின்பு, வில்லிவாக்கத்தில் மோகன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனை ஒன்றை தொடங்கினார்.
டாக்டர் மோகன் ரெட்டி நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதோடு நின்று விடவில்லை. மேலும் அவர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு விநோகிப்பது, சமூக சேவை புரிவது என எண்ணற்ற சேவையை புரிந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil