ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூத்துறை சோதனைச் சாவடி அருகே, கோட்டக்குப்பம் மற்றும் மதுவிலக்கு நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட போலி மதுபானங்களைக் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள உளவாய்க்கால் பகுதியில் போலியான மதுபான ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்த ஆலையிலிருந்து போலியான மதுபானங்களைத் தயாரித்து தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் விற்பனைக்கு எடுத்துச் சென்ற அவர்களிடம் இருந்து 209 அட்டைப் பெட்டிகளில் மொத்தம் 10,032 போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் அனுமந்தை செட்டிகுப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் (குப்புசாமியின் மகன்), அனுமந்தை செவிடங்குப்பத்தைச் சேர்ந்த சக்திவேல் (அருணாச்சலத்தின் மகன்), புதுச்சேரி சீனிவாசபுரத்தைச் சேர்ந்த பால் ஜோஸ் (ஸ்டீபனின் மகன்), திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்டி (சின்னசாமியின் மகன்), சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சித்திக் (சிதம்பரத்தின் மகன்) மற்றும் இவர்களுடன் 11 நபர்கள் இணைந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், ஆரோவில் காவல் ஆய்வாளர் கமலஹாசன், காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இதில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜசேகர் (45 - த/பெ. குப்புசாமி), பாண்டியன் (46 - த/பெ. சண்முகம்), மூர்த்தி (42 - த/பெ. அருணாச்சலம்), பிரபு (36 - த/பெ. கண்ணாயிரம்) மற்றும் ரமேஷ் அதியமான் (54 - த/பெ. ரகுநாதன்) ஆகிய ஐந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.