காதலர் தினத்தை கொண்டாடி காதலிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆடு திருடி மாட்டிக் கொண்ட கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் தமக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் ஆடுகளை வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது ஆட்டுப்பட்டியில் நன்கு வளர்ந்து இருந்த ஆடு ஒன்றினை சொகுசு பைக்கில் வந்த 2 இளைஞர்கள் திருடிச்செல்வதை கண்டு திருடன், திருடன் எனக் கூச்சலிட்டார்.
இதனையடுத்து சொகுசு பைக்கில் பறந்த, ஆடு திருடர்களை கிராமத்தினர் விரட்டிப்பிடித்து, இருவரையும் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் ஆடு திருடியது அப்பகுதி கல்லூரி ஒன்றில் பயிலும் அரவிந்த்குமார் என்பது தெரியவந்தது. இவர் காதலர் தினத்தை தனது காதலியுடன் கொண்டாட தனக்கு பணம் இல்லாததால், தனது நண்பன் மோகன் என்பவருடன் சேர்ந்து ஆடு திருடி அதை விற்று அதில் வரும் பணத்தைக்கொண்டு காதலிக்கு பரிசு கொடுப்பதற்கும், காதலர் தினத்தை கொண்டாடுவதற்கும் திட்டமிட்டதாக அரவிந்த்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கண்டாச்சிபுரம் கிராமப்பகுதியை கொண்டதாக இருப்பதால் அங்கு விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பு அதிகம் இருக்கின்றது. இதை நோட்டமிட்ட சிலர் சில நாட்களாகவே ஆடுகளை திருடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் பல புகார் கொடுக்கப்பட்டிருப்பதால், ஆடு திருடும் கும்பலுக்கும், தற்போது பிடிபட்ட கல்லூரி மாணவர்க்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தியிருக்கின்றனர்.
காதலர் தினத்தை கொண்டாட கல்லூரி மாணவர் ஆடு திருடிய சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பாகியிருக்கின்றது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“