/indian-express-tamil/media/media_files/2025/04/18/NoNLQV8ZGrkW8I5oletR.jpeg)
விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் 22 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று யாரும் சாமி தரிசனம் செய்ய வரவில்லை. மூன்று சிறுவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில் அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவிலைச் சுற்றி சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று (17.04.2025) காலை திறக்கப்பட்டது. கோவிலை சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் ஏராளமான பட்டியல் சமூக மக்கள் அம்மனை வழிபாடு செய்தனர். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் யாரும் சாமி தரிசனம் செய்ய வரவில்லை.
இந்த நிலையில் இன்று இரண்டாம் நாளில் ஊர் மக்கள் சார்பில் பால்குடம் ஏந்தி வந்து அம்மனை வழிபடுவார்கள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஊர் மக்கள் யாரும் இன்று பால்குடம் ஏந்தவில்லை. சாமி தரிசனமும் நடக்கவில்லை. மூன்றே மூன்று சிறுவர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.