விழுப்புரம் மாவட்டத்தில், பெயரளவில் மட்டுமே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தால் இரவு பகல் பாராமல் நெல் கொள்முதல் நிலைய வாசலிலே தினமும் கண் விழிக்கும் விவசாயிகள் மேலும் கர்மகாரிய கொட்டகையை நெல் கொள்முதல் நிலையம் பயன்படுத்துவதால் கர்ம காரியம் செய்ய இடம் இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நாள் ஒன்றுருக்கு 800 மூட்டைகள் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தியும் நாள் ஒன்றிற்கு 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதலுக்கு எடுத்துக் கொள்வதாகவும் அப்படி எடுத்துக் கொள்ளும் நெல் மூட்டை ஒன்றிற்கு 45 முதல் 50 ரூபாய் கையூட்டு கேட்பதாகவும் கூறுகின்றனர் மேலும் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் 500 மூட்டைகள் வைப்பதற்கு கூட கூடாரம் இல்லாமல் உள்ளது. மேலும், கொள்முதல் செய்த நெல்லினை கொள்முதல் நிலையம் அருகே உள்ள கருமகாரிய கொட்டகையில் நெல் மூட்டைகளை வைத்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/09/2viKuvO3CUOhU8F402Lh.jpg)
இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் குறைவான அளவு நெல் கொள்முதல் செய்வதால், எப்பொழுது மழை வரும், என்ன ஆகும் என்று தெரியாமல் 15 நாட்களுக்கும் மேலாக ஆனாங்கூர் நெல் கொள்முதல் நிலைய வாசலிலேயே விவசாயிகள் தினமும் நெல் கொள்முதல் செய்துவிட மாட்டார்களா என காத்துக் கொண்டிருப்பதாகவும் இந்த கொள்முதல் நிலையம் பெயரளவில் மட்டுமே செயல்படுவதாகும் தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு இன்னல்களுக்கு பிறகு நெல் கொள்முதல் எடுத்துக் கொண்டாலும் அதற்கான பணம் இரண்டு மாத காலங்கள் மேலாகியும் வராமல் உள்ளது என தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நெல் கொள்முதல் நிலையங்களை தவிர்த்து குறைந்தபட்ச விலைக்கு இடைத்தரகர்களிடம் நெல் கொள்முதலுக்கு கொடுப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வரும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவிக்கின்றனர்.