விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் ரமேஷ் என்பவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரமேஷுக்கு 7 ஆண்டு சிறையுடன் ரூ.5,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் அண்ணாநகர் கே.கே ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். 47 வயதான இவர், கோலியனூர் புத்துவாய் மாரியம்மன் கோயில் அருகே கடந்த 28.08.2023 ஆம் தேதி அன்று பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், நீதிமன்ற விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி வினோதா வெளியிட்டுள்ள உத்தரவில், 10 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் வழக்கில் ரமேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இருந்து ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.