தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார்.
இதன்பிறகு 10,12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கவுரவித்தும் வருகிறார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார்.
பணிகள் தீவிரம்
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலை கிராமத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனிடையே, த.வெ.க மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மாநாட்டுக்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இன்று சனிக்கிழமை முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அத்துடன், த.வெ.க மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு, செயல்வடிவ குழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துக் குழுக்களுக்கான தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை பொதுச் செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
காவல்துறை உத்தரவு
இந்த நிலையில், த.வெ.க மாநாட்டுக்கு கூடுதலாக 75 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்ய விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மாநாட்டிற்கான வாகனங்கள் நிறுத்தும் இடத்தை விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா ஆய்வு செய்துள்ளார். த.வெ.க மாநாட்டுக்கு 15 லட்சத்திற்கு மேற்பட்டோர் வருகை தர இருப்பதால் கூடுதல் இடங்களை ஏற்பாடு செய்ய அறியுறுத்தியுள்ளார். த.வெ.க மாநாட்டிற்காக தற்போது 45 ஏக்கர் நிலம் வசப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 74 ஏக்கர் நிலத்தை ஏற்பாடு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
த.வெ.க மாநாட்டுக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் காவல்துறையின் இந்த திடீர் உத்தரவு த.வெ.க நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திட்டப்படி மாநாடு நடக்குமா? என்கிற கேள்வியும் தொற்றிக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“