மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தமிழக அரசுக்கு கண்டனம், தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும், கனிம வளக் கொள்ளையினைத் தடுக்க வேண்டும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பா.ஜ.க சார்பில் தமிழகத்தின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நேற்று (ஜூலை 23) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் தெற்கு பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி கலிவரதன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த தி.மு.க தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் தூத்துக்குடி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும் விழுப்புரம் தெற்கு பா.ஜ.க தலைவர் கலிவரதன் அவதூறாக பேசியதாக விக்கிரவாண்டி தி.மு.க நகர துணைச் செயலாளர் சித்ரா புகார் அளித்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பா.ஜ.க மாவட்டத் தலைவர் கலிவரதனை கைது செய்துள்ளனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளது. கலிவரதனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி விக்கிரவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“