விழுப்புரம் டிராபிக் சிக்னல்களில் கடும் வெயிலில் அவதிப்படும் வாகன ஓட்டிகளுக்காக நிழல் தரும் பசுமை பந்தல் (கிரீன் நெட்) அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிக்னல்களில் சற்று இளைப்பாறுகின்றனர்.
விழுப்புரத்தில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 9:00 மணிக்கே துவங்கும் வெயில் படிப்படியாக அதிகரித்து பகல் முழுவதும் சுட்டெரிக்கிறது. இந்த வெயில் தாக்கம் மாலை 5:00 மணி வரை தொடர்வதால், பகல் நேரங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் வெயிலில் சிக்கி அவதிப்படுகின்றனர். கடும் வெயில் காரணமாக சாலையில் இருந்து எதிரொலிக்கும் அனல் காற்றால் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். விழுப்புரம் நான்கு முனை சிக்னலில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீண்ட நேரம் கடும் வெயிலில் நின்று வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை, விழுப்புரம் நகராட்சி இணைந்து விழுப்புரம் சிக்னலில் கோடை வெயிலை தாக்கத்தை குறைக்கும் வகையில், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் சற்று இளைப்பாறும் வகையில் நிழல் தரும் பசுமை நிழல் பந்தலை அமைத்துள்ளனர். இதனை விழுப்புரம் நகர மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதனை அடுத்து பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, பழங்களை அவர் வழங்கினார்
நிகழ்ச்சியில் காவல்துணை கண்காணிப்பாளர் ரவீந்திரநாத் குப்தா, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் குமரராஜா, விஜயரங்கன், விழுப்புரம் திமுக நகர செயலாளர் சக்கரை, இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகள் டாக்டர் கோவிந்தராஜ், டாக்டர் திருமாவளவன், சரோஜினி டிரஸ்ட் அருள்ராஜ், அமரஜி, புல்லட் மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.