/indian-express-tamil/media/media_files/2025/10/13/villupuram-2025-10-13-19-18-03.jpeg)
விழுப்புரம் | அக்டோபர் 13, 2025
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை காவல்துறை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து நான்கு விலையுயர்ந்த இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மரக்காணம் தாலுகா ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (38) என்பவர், தனது ராயல் என்பீல்ட் இரு சக்கர வாகனம் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடு போனதாக கடந்த 07.10.2025 அன்று பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தத் தொடர் திருட்டுச் சம்பவங்களின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில், பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் பிரகாஷ் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மடக்கிப் பிடிப்பு மற்றும் விசாரணை
காவல்துறையினர் கொளத்தூர் ஜங்ஷன் சிறுவாடி கிராமம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்த முயன்றபோது, அவர்கள் நிற்காமல் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். சுதாரித்துக்கொண்ட தனிப்படையினர், அவர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் திருமங்கலம் கிராமம் பெருமாள் பட்டியைச் சேர்ந்த அஜித் (20) மற்றும் மரக்காணம் தாலுக்கா எம். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அருண் (21) என்பது தெரியவந்தது.
4 வாகனங்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்ட அஜித் மற்றும் அருணிடம் மேலும் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் ஒலக்கூர், விழுப்புரம் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் மதுராந்தகம் ஆகிய பகுதிகளிலும் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
திருடர்கள் பதுக்கி வைத்திருந்த நான்கு இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.