ஐஎஸ்எல் கால்பந்து விளையாட்டு தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 11 அணிகள் விளையாடுகின்றன. இதில் சென்னை அணி நேற்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. உள்ளூரில் விளையாடுவதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கியது. சென்னை வீரர் ஸ்லிம்கோவிச் முதல் கோலை அடித்து அசத்தினார். இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்த நிலையில், ஆட்டம் விறுவிறுப்பானது. 84-வது நிமிடத்தில் சென்னை வீரர் 3-வது கோல் அடித்தார். அதன் பின் ஜாம்ஷெட்பூர் அணியால் கோல் அடிக்க முடியாத நிலையில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய சென்னையின் எப்சி அணி வீரர் வின்சி பரெடோ,
இந்த போட்டியில் நான் அடித்த முதல் கோலை உயிரிழந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவிற்கு சமர்பிப்பத்தாக கூறினார். இது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, கால்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் சில தினங்களுக்கு முன் மூட்டு வலி பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனை சென்ற நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நவம்பர் 15-ம் தேதி உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“