சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீதான பெண் எஸ்பியின் பாலியல் புகாரை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு விசாகா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
ஐ.ஜி. மீது பாலியல் குற்றச்சாட்டு... விசாகா கமிட்டி அதிரடி:
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக இருக்கும் முருகன் கடந்த சில மாதங்களாக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. பல முறை எச்சரித்தும் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்ததை அடுத்து அந்தப் பெண் அதிகாரி இது குறித்து புகார் அளித்தார்.
கடந்த ஆகஸ்டு- 1-ம் தேதி மேலதிகாரி உச்சகட்டமாக பாலியல் தொல்லை கொடுக்க, இனியும் பொறுத்தால் சரியல்ல என்று அந்தப் பெண் அதிகாரி ஆகஸ்டு 4-ம் தேதி அன்று முதல்வரின் அலுவலகம், டிஜிபி, உள்துறைச் செயலர் உள்ளிட்டோருக்கு மேலதிகாரி மீது புகார் அளித்தார்.
இதற்கிடையே திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், ‘காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டால் அதை விசாரிக்கும் விசாகா கமிட்டி ஏன் செயல்படவில்லை’ என்று அபதிவிட்டிருந்தார். இதனால பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டியின் தலைவராக மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி சீமா அகர்வாலும், உறுப்பினர்களாக போக்குவரத்துக் கழக ஏடிஜிபி சு.அருணாச்சலம், காஞ்சிபுர சரக டிஐஜி தேன்மொழி, டிஜிபி அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் மற்றும் வெளியிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினராக ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி அன்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் தலைமையில் கமிட்டியின் கூட்டம் டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கமிட்டி தலைவர் சீமா அகர்வால் உட்பட அனைத்து உறுப்பினர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு பரிந்துரை:
புகாருக்கு உள்ளான நபரும், புகார் கூறியவரும் ஐபிஎஸ் அந்தஸ்து அதிகாரிகள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டிய சட்டமுறைகள் குறித்தும், இருவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் புகாரை விசாரித்த விசாகா கமிட்டி, ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றத்தின் தன்மை அடிப்படையில் புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதாலும், மின்னஞ்சல், வாட்ஸ் அப், கண்காணிப்பு கேமரா என பல ஆதாரங்கள் சைபர் பிரிவு மூலம் விசாரணை நடத்தவேண்டி இருப்பதாலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி பரிந்துரைத்துள்ளது. சிபிசிஐடிக்கு இந்த விசாரணையை பரிந்துரைத்தாலும், தமிழக அரசு இதற்காக முறையாக உத்தரவிட வேண்டும். அதன்பின்னர் விசாரணை காலம் உள்ளிட்டவை நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.