/tamil-ie/media/media_files/uploads/2021/04/vivek-wife-press.jpg)
'சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்பெற்ற நடிகர் விவேக் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும், பல்வேறு திரைப்பிரபலங்களும் பொதுமக்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் தமிழக அரசு, விவேக்கின் கலை மற்றும் சமுதாய பணிகளை கௌரவிக்கும் விதமாக, காவல்துறை மரியாதையுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்தது. இதனையடுத்து சென்னை மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காவல்துறையினர் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்று விவேக்கின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விவேக்கின் மனைவி அருட்செல்வி, "என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில், என் குடும்பத்துக்கு பக்கபலமாகவும் மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றைக்கும் நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். இது என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.
அடுத்து காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசிவரை நீங்கள் எங்களுடன் நின்றீர்கள். அதற்கு நன்றி. ஊடகத்துறை சகோதரர்களுக்கும் நன்றி. உலகமெங்கும் உள்ள மற்றும் நேற்று வெகுதூரம் என் கணவருடன் கடைசி வரை வந்த அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு என்றும் நன்றி" என தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.