வி.கே.சசிகலா பரோல் முடிந்தது. ம.நடராஜனின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்ட அவர் சில நாள் இடைவெளிக்கு பிறகு பெங்களூருவுக்கு இன்று செல்கிறார்.
வி.கே.சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கடந்த 20-ந் தேதி அவர் காலமானார்.
வி.கே.சசிகலா தனது கணவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலுக்கு விண்ணப்பித்தார். அவருக்கு அனுமதி கிடைத்ததும் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்தார். நடராஜன் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்து கொண்டார்.
சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் மூன்று நிபந்தனைகளை விதித்தது. தஞ்சை அருளானந்த நகர் இல்லத்தில்தான் தங்க வேண்டும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, மீடியாவுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என்பவையே அந்த நிபந்தனைகள்! இவற்றை சசிகலா கடைபிடித்தார். கடந்த 25-ம் தேதி சசிகலா தஞ்சையில் தங்கியிருந்த போதுதான் காவிரி பிரச்னைக்காக டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இருந்தார்.
வி.கே.சசிகலாதான் புதிதாக தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பொதுச்செயலாளர் என இதே காலகட்டத்தில் டிடிவி தினகரன் அறிவித்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாக சசிகலாவை சந்திக்கவில்லை. அதேசமயம் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் துக்கம் விசாரிக்கிற வகையில் சசிகலாவை சந்தித்தனர்.
அதிமுக தரப்பிலோ அல்லது வேறு யாருமோ இதை பிரச்னை ஆக்கவில்லை. ம.நடராஜன் இறுதி அஞ்சலி முடிந்து சில நாட்கள் தஞ்சையில் முகாமிட்டிருந்த சசிகலா பரோல் காலம் முடிந்து இன்று (மார்ச் 31) காலை 11 மணி வாக்கில் தஞ்சையில் இருந்து பெங்களூரு சிறைக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.