சென்னை உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் வாக்காளர் பெயர் சேர்த்தல் / நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்பட உள்ளன. சென்னையில் 3754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ளலாம்.
18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும். ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலம் பொதுமக்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும் மற்ற நாட்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதுவரை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
"நேஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்" வழியாகவும் tn.election.gov.in என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு முகாம்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது உதவி தலைமை ஆசிரியர் தலைமை அலுவலகராகவும் அவருக்கு கீழ் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஊழியர் வீதம் செயல்படுவார்கள் என தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
2 மாத பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடந்து முடிந்த பிறகு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி முதல் வாரம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.