பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore | rain-in-tamilnadu: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்திற்கு வெளியில் செயல்படும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் கடையில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன.
நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்திற்கு வெளிப்புறம் சுற்றிலும் உணவகங்கள், கடைகள், விளையாட்டுப் பொருட்கள் விற்பனையங்கள் என சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே வ.உ.சி மைதானம் மற்றும் பூங்கா உள்ளது.
தினம்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வார்கள். வார விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர் அங்கு பொழுதை கழிப்பர். அப்பகுதியில் கால்பந்து, டென்னிஸ், ஆகிய விளையாட்டு மைதானங்களும் உள்ளது. மாநகராட்சியின் ஜிம்னாஸ்டிக் தற்காப்பு பயிற்சி மையமும் அங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் மாலையில் தற்காப்பு பயிற்சி மேற்கொள்வார்கள்.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழையில் பல்வேறு கடைகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால், கடைகளுக்குள் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மழைக் காலங்களில் கடைகளுக்குள் நீர் புகுவது வழக்கமாக இருப்பதாகவும், இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் கடைகளுக்குள் புகுந்து விடுவதாகவும், சாலைகளிலும் தேங்கி விடுவதாக தெரிவித்தனர். இந்த கடைகளுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வரும் நிலையில், தங்களுக்கென கழிவறை வசதி கூட இல்லை என்றும், பல நாட்களாக இது போன்ற இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், மாலை நேரங்களில் கொசுக்கள் பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்து விடுவதாகவும், இதனால் தற்காப்பு பயிற்சிக்காக வரும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என தெரிவித்த அவர்கள், இனிமேலாவது மாநகராட்சி அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் தேங்காதவாறும் மழைநீர் கடைகளுக்குள் புகாத வண்ணமும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“