தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, 'வாட்டர் பெல்' திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று ஒசூரில் நடைபெற்ற ஒரு விழாவில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதற்கான 'வாட்டர் பெல்' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாணவர்களின் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாடு, அவர்களின் கற்றல் திறனைப் பாதிக்கும் என்பதால், இந்தத் திட்டம் அவசியமானது என்று பள்ளிக் கல்வித்துறை சுட்டிக்காட்டியுள்ளது. வெயில் காலங்களில் குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சோர்வு, தலைவலி, கவனச்சிதறல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதைப் போக்கும் விதமாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல், அரசு பள்ளிகளில் தினமும் மூன்று முறை 'வாட்டர் பெல்' அடிக்கப்படும். அதன்படி, காலை 11 மணி, பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு இந்த பெல் அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட நேரங்களில் பெல் அடிக்கும் போது, மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பு சூழல் பாதிக்காத வகையில், பெல் அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்கு நேரம் ஒதுக்கி, நீர்ச்சத்து குறைபாடு இன்றி உற்சாகமாக கல்வி கற்க முடியும் எதிர்பார்க்கப்படுகிறது.