டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வரும் ஜூன் 12-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, சுரங்கம் உள்ளிட்ட பகுதிகளையும், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார். மேல்மட்ட மதகு, கீழ்மட்ட மதகு ஆய்வு சுரங்கம் மற்றும் அணை மின் நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார். அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். மேட்டூர் அணை பராமரிப்பு பணி சிறப்பாக நடந்து வருகிறது. மேட்டூர் அணை நல்ல நிலையில் உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் முன்பாக நேரடியாக பார்வையிட்டு அணையின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 12-ம் தேதி, தமிழ்நாடு முதல்வர் நேரில் வந்து மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முன்கூட்டியே பராமரிப்பு பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் கூடுதல் பணிகள் கேட்டுள்ள நிலையில், அந்தப் பணிகள் வழங்கப்படும். தற்போது, ரூ.20 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் மட்டுமே பணிகள் செய்ய முடியும். தற்போது, 2 மாதங்களுக்கு முன்பாக மேட்டூர் அணை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு பணிகள் நிறுத்தப்படும். பாசன காலம் முடித்த பிறகு பணிகள் துவக்கப்படும் என்றார். ஆய்வின்போது மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.79 அடியாகவும், நீர் இருப்பு 75.30 டிஎம்சியாகவும் உள்ளது. அதேநேரம் திருச்சி காவிரிப்பாலம் அருகே புதிய காவிரிப்பாலம் கட்டுமானப்பணிக்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றது. தற்போதுதான் காவிரி ஆற்றில் தூண் நிறுவுவதற்கான டெஸ்ட்டிங் நடைபெற்று வரும் நிலையில், வழக்கமான திட்டமிடல்படி ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படுமேயானால், அதற்குள் விரைந்து காவிரிப் பால பணிகளை முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்