தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் 100டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் இன்று (மார்ச் 30) கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம், மேயர் கல்பனா ஆனந்தகுமாருக்கு சொந்தமான லட்சுமிபுரம் வடக்கு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தப் பின் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேயரின் சொந்த வார்டுலயே குடிநீர் தட்டுப்பாடு எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை