சென்னை மாநகராட்சியில் அமைந்திருக்கும் பதினைந்து மண்டலங்களுக்கும் பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் சார்பில் சுமார் 100 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகிக்கப்படுகிறது.
2019 -20 ஆம் ஆண்டில், வீடுகளுக்கு 5 சதவிகிதமும் மற்றும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆண்டுதோறும் இதே சதவிகிதத்திற்கு கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் உயத்தப்படவில்லை. இந்த காரணத்தினால் பெருநகர சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இதன் காரணமாக 2023 – 24ஆம் நிதியாண்டில், வீடுகளுக்கு 5 சதவிகிதமும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் குடிநீர் கட்டணம் உயர்த்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வானது ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் வரும் வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீருக்கு மாதந்தோறும் ரூ.80 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வு அமலுக்குப் பிறகு இது ரூ.84 ஆக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களுக்கு ரூ.250 இருந்த கட்டணம் ரூ.263 ஆக உயர்கிறது. இதையடுத்து வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் லாரி குடிநீரைப் பொறுத்தவரை 6 ஆயிரம் லிட்டர் ரூ.475 இருந்து ரூ.499, 9 ஆயிரம் லிட்டர் குடிநீர் ரூ.700 இல் இருந்து ரூ.735 ஆக உயர்கிறது.