வேலூர் சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்டதால் சிறை விதிகளின்படி ராஜிவ்காந்தி கொலை குற்றவாளி முருகனை பார்க்க பார்வையாளர்கள் மனு அளித்தால் பரீசிலிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளியாக கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகன், தான் ஜீவ சமாதி அடைய போவதாக சமீபத்தில் அறிவித்து உண்ணாநிலை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் வேலூர் சிறையில் உள்ள முருகனை சந்திக்க அவரது உறவினரான தேன்மொழி சென்ற போது, அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்தாதக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் முருகனின் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் யாரிடமும் பேசாமல் உள்ளதால் அவரின் உடல்நிலை பாதிப்படையும் நிலை உள்ளது. எனவே முருகனை காப்பாற்ற வேண்டும் அதற்காக அவரை பார்க்க தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகனின் உடல்நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முருகன் கடந்த 11 நாட்களாக தண்ணீர் மட்டுமே அருந்துவதாகவும், உணவு எடுத்துக் கொள்ளவில்லை. உடனடியாக வேலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, சிறை அதிகாரிகள் நேற்று முருகனுடன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து, அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
இந்நிலையில் முருகனின் உறவினர் தேன்மொழி தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டதால் சிறை விதிகளின்படி பார்வையாளர்கள் அவரை பார்க்க அனுமதிப்போம் என தெரிவித்தார். மேலும் சந்திப்பு தொடர்பாக உரிய முறையில் மனு அளித்தால் அதனை சிறை விதிகளின் படி பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் மனுதாரரான தேன்மொழி, முருகனை சந்திக்க சிறைத்துறைக்கு மனு அளிக்க உத்தரவிட்டார், மேலும் அந்த மனுவை பெற்ற மூன்று நாட்களுக்குள் பரீசிலிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.