/indian-express-tamil/media/media_files/2025/09/14/mk-stalin-krishnagiri-2025-09-14-14-27-19.jpg)
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 404 நிறைவேற்றம்: ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.கவின் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த 505 வாக்குறுதிகளில் 404 திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும், சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்புகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.
கிருஷ்ணகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகள்
முதலமைச்சர் ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தபோது, தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோடு ஷோ மூலம் பொது மக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு, அவர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், சிறப்பு கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய அறிவிப்புகள்
இந்த நிகழ்ச்சியில், ரூ.3.05 கோடி மதிப்பிலான பெட்ரோல் இணைப்பு சக்கர வாகனங்களை 290 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். மேலும், ரூ.562.14 கோடி மதிப்பிலான 1,114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.270.75 கோடி மதிப்பிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார். மேலும், 85,711 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களையும், 2,23,013 பயனாளிகளுக்கு ரூ.2,052 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சிக்கான அறிவிப்புகள்
ஒசூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
அஞ்சட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம்.
கெலமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை.
கெலமங்கலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைத்தல்.
ஓசூர் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம்.
ஓசூர் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை.
எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றன
"தி.மு.க அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகின்றனர். பொய் சொன்னாலும், பொருத்தமாக சொல்லுங்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 404 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். திமுக ஆட்சி மீது வயிற்றெரிச்சலில் எதிர்க்கட்சியினர் பொய்களை பரப்புகின்றனர். மலிவான அரசியல் செய்யும் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்கள் பயன்பெறும் பல நலத்திட்டங்கள் நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாதவைதான். காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட மக்கள் பயன்பெறும் பல நலத் திட்டங்கள் நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாதவைதான்.
நீட் விவகாரம் குறித்து விளக்கம்
நீட் தேர்வு விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், "அ.தி.மு.க.வைப் போல நாடகம் ஆடாமல், அதற்கான சட்டப் போராட்டங்களை தி.மு.க. மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசுடன் பல்வேறு சூழ்ச்சிகள் மூலம் ஆளுநர் தடுத்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். விரைவில் நமது மாநில உரிமைகளைக் காக்கும் அரசு மத்தியில் அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.