திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத நிலையில், அமைச்சர்களான நாங்கள் மாணவர்களை காப்பியடிக்க விடுவோம் என, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வது நடைபெறுவது உறுதி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக, திமுக பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று திருச்சியில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத நிலையில், அமைச்சர்களான நாங்கள், மாணவர்களை காப்பியடிக்க விடுவோம் என கூறினார். முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.