மதுக்கடை அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விளக்கத்தை அளிக்கும் வரை மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுபான கடைகள் திறக்கப்பட்ட மாட்டாது தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, தமிழகத்தில் 2,800 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையில், சண்டிகர் மாநில ( யூனியன் பிரதேசம் ) அரசு தனது எல்லைக்குள் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக மாற்றி மதுபானக்கடைகள் திறக்கப்பட்டது.
இவ்வாறு திறக்கபட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாநில சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பயன்படுத்தி தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 1700 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம். சுந்தர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே மதுகடை திறக்க சாலைகளை வகை மாற்றம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை மீறி தமிழக அரசு புதிதாக மதுகடையை திறந்து வருகின்றது எனவே புதிதாக மதுகடை திறக்க தடை விதிக்க வேண்டும். தடை உத்தரவுக்கு பிறகு திறந்த அனைத்து மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண், உள்ளாட்சி பகுதி வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி மனு தாக்கல் செய்ப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தற்போது அரசியல் சாசன வழக்குகளை விசாரிப்பதால் கால அவகாசம் தேவை எனவும் தெரிவித்தார். மேலும், மனுதாரர் கூறியது போன்று 1700 கடைகள் திறக்கப்படவில்லை மாறாக 800 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல, இந்த விவகாரத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்கும் வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என உறுதியளித்தார்.
தமிழக அரசின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பின்னர் உத்தரவிட்டனர். அதில், உள்ளாட்சி பகுதிகளில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க வரும் 20 ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கினர்.
மேலும், இந்த விளக்கம் பெற்று தெரிவிக்கும் வரை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் புதிதாக மதுபான கடைகள் திறக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தனியார் பார் உரிமையாளர் உள்ளிட்டோரை இடையீட்டு மனுதராக சேர்க்க அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.