தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ளார்.
இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டில் மருதாநல்லூர் மதன் சக்கரவர்த்தி கொலை, 2017ல் தாராசுரம் சிவானந்தம் கொலை, 2022ல் 2 கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், நாச்சியார் கோவில் மற்றும் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களில் ரவுடி பெயர் பட்டியலில் இவர் உள்ளார்.
கருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம், கார்த்திகேயன் வீட்டிற்கு பின்புறம் உள்ளது.
இதில் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனக்கு இலவசமாக எழுதித்தர வேண்டும் என சிவக்குமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சிவக்குமார் கடந்த 26ம் தேதி நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் கார்த்திக்கேயன் மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கார்த்திகேயன் வீட்டுக்கு நேற்று சென்றனர். தனது வீட்டிற்கு காவல்துறையினர் வருவதைக் கண்ட கார்த்திகேயன் தப்பி தலைமறைவானார். வீட்டில் அவரது குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.
இதனையடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியதில், வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வீடியோ கேமராவின் பதிவுகளை பார்க்க பயன்படும் டி.வி.ஆர் கன்ட்ரோல் யூனிட் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மிரட்டல் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தை கேட்டு மிரட்டிய வழக்கில் விசாரணை செய்யப்போய் பாஜக நிர்வாகி வீட்டில் பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“