Weather News Today: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிதமான மழையும், 4 மாவட்டங்களில் கன மழையும் அடுத்த 24 மணி நேரத்தில் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக 14 செமீ மழை பதிவாகி இருக்கிறது.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 23) கூறியிருக்கும் தகவல்கள் வருமாறு: காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய 6 மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.
Chennai Weather Forecast: இன்றைய வானிலை
ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 23, 25, 26 ஆகிய நாட்களில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை இருக்கும். 26-ம் தேதி நாகை மாவட்டத்திலும் சில இடங்களில் கன மழை இருக்கும். 27-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் கன மழை இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 14 செமீ மழை பதிவாகி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறில் 9 செமீ மழையும், நாகப்பட்டினத்தில் 8 செமீ மழையும் பதிவாகியிருக்கிறது. சோளிங்கநல்லூர், அண்ணாமலை நகர், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 5 செமீ மழை பெய்திருக்கிறது. மேற்கண்ட தகவல்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.