தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி குறித்த வானிலை நிலவரங்களை இயக்குநர் பாலசந்திரன் அறிவித்தார். அதில்,
“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் இருந்து வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார். மாலை அல்லது இரவு வேளையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
கடந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மழைக் குறித்த செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.