தமிழகத்தில் ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை தொடர அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆசிரியர் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 60 விழுக்காடு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மீதம் 40 விழுக்காடு, அவர்களுடைய 12ம் வகுப்பு, பட்டபடிப்பு, பிஎட் படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு கணக்கிடப்படுகிறது.
தற்போது பள்ளி, கல்லூரிகளில் மதிப்பெண்கள் தாராளமாக வழங்கப்படுவது போல், 10 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய காலக்கட்டத்தில் வழங்காததால், குறைவான வெயிட்டேஜ் மதிப்பெண்களை விண்ணப்பதாரர்கள் பெற்றிருந்தனர். இதனால், தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் வைத்திருந்தும் ஆசிரியர் பணிக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக போராட்டம் நடத்தப்பட்டது. வெயிட்டேஜ் முறைக்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்ததையடுத்து வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் இருக்குமா? அல்லது வெயிட்டேஜ் முறையே தொடருமா? என்ற குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில், ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் முறையை தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். அத்துடன், 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் படிப்பு மதிப்பெண்கள் சேர்த்து கணக்கிடப்பட்டு தரவரிசை தயாரிக்கப்படும்.