கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களையும், நகைகள், ரொக்க பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சோதனைக்கு தொடர்புடைய ஒவ்வொருவரையும் சென்னை அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் வருமான வரித் துறையினர் நேற்று இரவு சோதனை நடத்தினர். நள்ளிரவு 1:30 மணி வரை இச்சோதனை நடைபெற்றது. ஜெயலலிதாவின் செயலாளர் பூங்குன்றனின் அறையில் இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரிமான வரித் துறையினரின் சோதனை வரவேற்கத்தக்கது. இந்தச் சோதனை முடிவல்ல தொடக்கம்தான்’ என தூத்துக்குடியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் 81-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சிதம்பரனாரின் இல்லத்திலுள்ள சிலைக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து, மரியாதைசெய்தார். மேலும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முன் உள்ள சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "தமிழகத்தின் கடல்வழி நுழைவு வாயிலான இந்த தூத்துக்குடியில்தான், வ.உ. சிதம்பரனார், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கப்பல் விட்டார். உலக வர்த்தகத்திலும், இந்தியாவிலுள்ள அனைத்து துறைமுகங்களைக் காட்டிலும் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம்தான் பல சாதனைகளைப் படைத்துவருகிறது. துறைமுகப் பகுதியில் ரூ.3,000 கோடி செலவில் கடல் ஆழப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் இப்பணி முடிவடையும். இப்பணி முடிவடைந்தால், தற்போது கையாளப்பட்டுவரும் 60 ஆயிரம் டன் சரக்குகளை இரு மடங்காக்கி 1.20 லட்சம் டன்களைக் கையாள முடியும். வ.உசி-யின் பெயரில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்தின் சார்பில், அவரது அடுத்த நினைவு தினத்திற்குள் ரூ.1 கோடி செலவில், அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியை சுற்றுலா மையமாக ஈர்க்கும் வகையில் அந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
போயஸ் கார்டனில் நடந்த வருமான வரிச்சோதனை பல காலம் திட்டமிடப்பட்டு, ஆதாரத்தின் அடிப்படையில்தான் நடந்துள்ளது. இதில் எவ்விதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை. அந்தப் பணம் அனைத்துமே ஒட்டுமொத்த தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். மக்களை ஏமாற்றி சதி செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிதான் இச்சோதனை. தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கதுதான். இந்தச் சோதனைகள், தொடக்கம்தானே தவிர முடிவல்ல. தவறு நடந்த இடம் அனைத்திலும் சோதனை நடத்தப்பட வேண்டும்" என்றார்.