Vikravandi, Nanguneri assembly constituency by-election: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று முதல் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் பெயர்களை இன்னும் அறிவிக்காமல் உள்ளன. இதனால், இக்கட்சிகள் தங்களை வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திமுகவைச் சேர்ந்த ராதாமணி உடல் நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் காலமானார். நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக வெற்றிபெற்றதால் அவர் நாங்குநேர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் இன்று செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே இன்னும் தங்கள் கட்சி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல், இன்று (செப்டம்பர் 23) நடைபெறும் என அக்கட்சி தலைமைக்கழகம் அறிவித்தது. போட்டியிட விரும்புபவர்கள் விருப்பமனுக்களை நேற்று முதலே அளிக்கலாம் என்று அறிவித்தது.
அதே போல, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பிலும் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், இவ்விரு கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளன.
நேற்று முன் தினம் செய்தியாளர்களைச் சந்தித்த த்முக தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் புதுச்சேரியில் காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று அறிவித்தார். மேலும், திமுக சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிடுபவர்கள் செப்டம்பர் 23 ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் செய்யலாம். அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 24 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து இன்று திங்கள்கிழமை விருப்பமனு பெறப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.
இதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை மாலைக்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.