சுகந்திர போட்ட தியாகிக்கு ஓய்வூதியம் வழங்காத அதிகாரிகளின் செயலுக்காக சென்னை உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்டது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இவர் 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்க கோரி அவர் தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். அத்துடன், இந்திய தேசிய ராணுவத்தின் பெண் கேப்டனாக பணியாற்றிய வரும் 2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் வேட்பாளராக போட்டியிட்டவருமான லட்சிமி ஷெகல் உள்ளிட்ட இருவரின் பரிந்துரை கடிதத்தையும் காந்தி இணைத்துள்ளார்.
ஆனால், அவரது விண்ணப்பம் அதிகாரிகளால் பரிசீலிக்கப்படாததை அடுத்து, 89 வயது காந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் அந்த மனுவில் தமக்கு ஓய்வூதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் வயது தொடர்பாக சில குறைபாடுகள் இருந்ததால் சில ஆவணங்களை கோரியதாகவும், அவற்றை அவர் வழங்காததால் விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, சுதந்திர போராட்ட வீரர் காந்திக்கு ஓய்வூதியம் வழங்கி இரண்டு வாரங்களில் உத்தரவு பிறப்பித்து, அதை நேரடியாக அவருக்கு வழங்க வேண்டும் என்றும், ஓய்வூதிய பாக்கியை கணக்கிட்டு நான்கு வாரங்களில் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்க போராடிய தங்களுக்கு, பிடிவாத அதிகாரிகளாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்காக இந்த நீதிமன்றம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் நீதிபதி தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:When madras hc apologised to a freedom fighter