தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு ஜூன் 30-ம் தேதி பணி ஓய்வு பெரும் நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பியை தேர்வு செய்வதற்கான தேர்வு ஜூன் 22-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.
தமிழக காவல் துறையின் தலைமை டி.ஜி.பி சைலேந்திரபாபு பணி காலம் முடிந்து ஏற்கெனவே, ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுளார். அவர் வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதனால், புதிதாக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதிய டி.ஜி.பி-க்கான பட்டியலை தேர்வு செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
புதிய சட்டம், ஒழுங்கு டி.ஜி.பிக்கான போட்டியில் சஞ்சய் அரோரா (டெல்லி காவல் ஆணையர்), பி.கே.ரவி, சங்கர் ஜிவால் (சென்னை காவல் ஆணையர்), ஏ.கே.விஸ்வநாதன் (முன்னாள் சென்னை காவல் ஆணையர்), ஆபாஷ் குமார் (தீயணைப்பு துறை இயக்குநர்), சீமா அகர்வால் (தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர்) உள்பட 10 பேர் உள்ளனர். டெல்லியில் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இறுதி செய்யப்படுகின்றனர்.
டி.ஜி.பி ரேஸில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என்றும் இந்த 3 பேரில் ஒருவரை தமிழகஅரசு தேர்வு செய்யும். தற்போதைய நிலவரப்படி முதல் இரண்டு இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணி ஓய்வு பெறும் டி.ஜி.பி சைலேந்திரபாபுவுக்கு ஜூன் 30-ம் தேதி பிரிவு உபச்சார விழா நடைபெறும். 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையால் அரசு விடுமுறை. எனவே, 28-ம் தேதி, தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு புதிய டி.ஜி.பியின் பெயர் வெளியிடப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"