இளையராஜா உட்பட தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் துறை தலைவரும், அறிவியலாளருமான ராஜகோபாலன் வாசுதேவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ராஜகோபாலன் வாசுதேவன்?
இவர் கண்டுபிடித்த அரிய கண்டுபிடிப்புதான் இன்றைக்கு இந்தியாவின் சாலைகளை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற துணைபுரிந்துக் கொண்டிருக்கிறது. மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியரான ராஜகோபாலன் வாசுதேவன், கடந்த 2001-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் மூலம் பிளாஸ்டிக் சாலைகள் குறித்து அறிந்துகொள்கிறார். அப்போதிலிருந்து அந்த தொழில்நுட்பத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார். அதுமட்டுமல்லாமல், தொடர் ஆய்வு முயற்சிகள் மூலம் கடந்த 2012-ஆம் ஆண்டு, ’பிளாஸ்டோன்’ எனப்படும் பிளாஸ்டிக் கழிவுகளாலான கற்களையும் கண்டுபிடிக்கிறார். இவரது முயற்சியில் உருவான பிளாஸ்டிக் சாலை தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்டிக் கற்கள் மூலம் சாலை அமைப்பதை பின்பற்ற வேண்டும் என, இந்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
பிளாஸ்டிக் சாலை என்றால் என்ன?
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகளை அமைக்கும் இந்த தொழில்நுட்பம் மூலம், திடக்கழிவு மேலாண்மையில் சிறந்துவிளங்குவதுடன் அந்த சாலைகளும் தரமானதாக இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த சாலைக்கு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்ஸ் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மழை மற்றும் குளிரை தாங்கும் விதத்தில் இந்த சாலைகள் உள்ளன. அதேபோல், பேராசிரியர் ராஜகோபாலன் கண்டுபிடித்த பிளாஸ்டோன் எனப்படும் பிளாஸ்டிக் கற்கள், உயர் அழுத்தத்தை தாங்கும் விதத்தில் இருக்கும். நீரினால் அழியாதவனவாகவும் உள்ளன. ஒரு பிளாஸ்டிக் கல்லை உருவாக்க 300 பிளாஸ்டிக் பைகள், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் தேவைப்படுகிறது. இவை சுற்றுசூழலுக்கு உகந்ததாகவும், நச்சு வாயுக்களை உமிழாததாகவும் உள்ளன.