/indian-express-tamil/media/media_files/2025/06/12/EeI6oGZfZ86VzWwHM9JN.jpg)
பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயி யார்?; ஸ்டாலின் பொது மேடையில் விவாதிக்க தயாரா?: பி.ஆர்.பாண்டியன் சாடல்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் நிதியை பயன்படுத்தி ஈரோட்டில் விவசாயிகள் கருத்தரங்கம் கண்காட்சி என்ற பெயரில் போலி நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் பச்சத்துண்டு விவசாயிகள் மீது புழுதி வாரி தூற்றியுள்ளார். இதனால் அவரது ஆட்சிக்கும், அரசியலுக்கும் நன்மை பயக்கும் என்றால் ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால் உங்கள் ஆட்சியின் அலங்கோலத்தால் விவசாயிகள் படும் துன்பங்களை பட்டியலிட்டு வெளி உலகுக்கு எடுத்துரைத்தால் போலி பட்டம் கொடுக்க முயற்சிப்பீர்களா?
உங்கள் பட்டம் எங்களுக்குத் தேவையில்லை. எங்களுக்கு பட்டமளிப்பது பாதிக்கப்படும் விவசாயிகள்தான் என்பதை நீங்கள் உணர வேண்டும். முதலமைச்சர் பட்டியலை வாசித்திருக்கிறார். 2021-க்கு முந்தைய ஆட்சியில் காவிரி டெல்டாவில் பேரிடரால் ஏற்பட்ட மகசூல் இழப்பிற்கு விவசாயிகள் பெற்ற தொகை பட்டியலையும், தங்கள் ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட இழப்பீட்டிற்கான பட்டியலையும் ஒப்பிட்டு வெளியிட தயாரா?
குறுவைக்கு காப்பீடு செய்து இழப்பீடு பெற்று வந்தோமே! தாங்கள் பொறுப்பேற்ற 2021 முதல் குறுவை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டது ஏன்? காப்பீட்டு நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பிரீமியம் பெற்றுக் கொடுக்க எடுக்கும் முயற்சி வேகம், இழப்பு ஏற்பட்டு வீதியில் போராடும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதற்கு முன்வந்தது உண்டா? பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வழங்கப்பட்ட இடுபொருள் இழப்பீடு நிதி குறித்து புள்ளிவிவரங்களை கடந்த ஆட்சிக்காலத்திலும், தங்கள் ஆட்சி காலத்திலும் வழங்கியதை புள்ளி விபரத்தோடு முதலமைச்சர் வெளியிட தயாரா?
1975 முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்து வந்தார். இந்தியாவில் முதன் முதலில் நெல் கொள்முதலை அரசு பொறுப்பேற்று செயல்படுத்தியது கருணாநிதிதான்.
தாங்கள் பொறுப்பேற்றது முதல் தனியாருக்குத் தாரை வார்த்தீர்களே? இது விவசாயிக்கு மட்டுமல்ல,கலைஞருக்கு செய்த துரோகம் இல்லையா? உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சுயநலத்திற்காக எந்தவொரு முன் அனுபவமோ, கொள்முதலுக்கான கட்டமைப்போ, அதற்கான வங்கி பணி பரிவர்த்தனைக்கான தகுதியும் இல்லாத தனி நபருக்கு தாரை வார்த்ததின் மூலம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரூபாய் 800 கோடி அளவிலான நெல்லை கொள்முதல் செய்து 3 மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யாமல் விவசாயிகள் வயிற்றிலடித்து வீதியில் கிடந்து போராடுகிறார்களே!முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் சொன்னது உண்டா?
மாறாக விவசாயிகளுக்கு 10 தினங்களுக்குள் பணத்தை கொடுப்பதற்கு உத்தரவாதம் கொடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினுடைய மேலாண்மை இயக்குனர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் தொடர் கட்டாய விடுப்பில் சென்றுள்ளாரே தங்கள் கவனத்திற்கு வந்ததா?
நீங்கள் ஈரோட்டில் பேசிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் வீதியில் அமர்ந்து ஒப்பாரி வைத்தார்களே! உங்கள் காதில் விழவில்லையா?
விவசாயிகள் நெல்லை அபகரித்ததோடு, அதற்கான கொள்முதல் குறித்த கணக்கு விபரங்கள் கூட இல்லாமல் அனுமதித்த மாவட்ட ஆட்சியர்கள் பரிதவிக்கிறார்களே! விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்களே இவர்களுக்கு என்ன? பதில் கூற போகிறீர்கள்.
விவசாயி நெல்லை வைத்து ரூ800 கோடி அளவிற்கு ஊழல் செய்ததாக வெளி வந்திருக்கிற செய்தி குறித்த நடவடிக்கை என்ன? பதில் அளிக்க தயாரா?
2021 ஆட்சி பொறுப்பேற்ற உடனையே நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500-ம் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000-ம் வழங்கப்படும் என்று அறிவித்து வாக்கு கேட்டீர்களே நிறைவேற்றுனீர்களா? மாறாக மத்திய அரசு ஆண்டொன்றுக்கு யானை பசிக்கு சோலப் பொறி போல் உயர்த்தி வரும் விலையை காட்டி தற்போது நான்காண்டு கடந்த நிலையில் ரூ.2,500 வழங்குகிறோம் என்று மார்தட்டுகிறீர்களே உண்மைதானா?
இன்றைய உற்பத்தி செலவு கணக்கிட்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3500 ம் கம்பு டன் 1க்கு ரூ 5000 வேண்டும் என விவசாயிகள் போராடுகிறார்களே பதில் அளிக்க தயாரா ? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்யும் என்று அறிவித்தீர்களே, தள்ளுபடி செய்தீர்களா? மாணவர்களுக்கான கல்விக்கடன் நிலுவையை தள்ளுபடி செய்வோம் கல்வியை பாதுகாப்போம் என்று சொன்னீர்களே செயல்படுத்தினீர்களா?
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை தாங்கள் பொறுப்பேற்ற உடனேயே நாகப்பட்டினம் திருமருகல் ஒன்றியத்தை பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்தீர்களே உண்மையா? இல்லையா? முல்லைப் பெரியாறு 142 அடி தண்ணீரை நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்தி வந்த நிலையில் தாங்கள் பொறுப்பேற்றது முதல் ஓராண்டாவது முழு கொள்ளளவை நிரப்பி திறக்கப்பட்டதா?
தங்கள் ஆட்சிக்காலத்தில் முல்லை பெரியாறு அணைக்குள் அத்துமீறி நுழைந்து கேரளா அமைச்சர்கள் உங்கள் அனுமதியில்லாமல் தண்ணீரை திறந்தார்களே! கேள்வி கேட்டது உண்டா? வைகை அணை பராமரிக்கப்படுகிறதா காவிரி பாசனம் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனத் துறைக்கு பராமரிப்பு நிதி வழங்கியது உண்டா?ஆயிரம் கதவணைகள் கட்டப்படும் என்று அறிவித்தீர்களே கட்டப்பட்டதா?
காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் விலை கிடைக்காமல் வீதியில் நின்று போராடுகிறார்களே அதற்கான துறை இருந்தும் செயல்பட வில்லையே அதை கண்காணித்தது உண்டா? கொள்முதல் செய்த நெல்லுக்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று உடனடியாக உரிய தொகை விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகளுக்கு பாதுகாக்க வேண்டும்.தனியாருக்கான கொள்முதலில் ரத்து செய்து அரசே பொறுப்பேற்று கொள்முதல் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி 17ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம்.
ஒரு மாவட்டத்தில் மட்டுமே உற்பத்தி செய்யும் காய்கறிகள் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் பயன்படுத்தும் நிலையில், அதற்கான தட்டுப்பாடு உள்ள போது உற்பத்தி செய்யும் இடத்தில் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து பல மடங்கு விலையை உயர்த்தி தமிழ்நாட்டுக்குள்ளேயே விற்பனை செய்து கொள்ளை லாபம் அடிக்கும் இடைத்தரகர்களுக்கு துணை போகலாமா?
விவசாயிகளையும் விளை நிலங்களையும் அழிப்பதற்கென்று உலகத்தில் எந்த நாட்டிலும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொண்டு வராத தமிழக நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 யை கொண்டு வந்து விளைநிலங்களை விவசாயிகள் ஒப்பதல் இல்லாமல் அபகரிப்பதற்கு
அனுமதி அளித்துள்ளீர்களே நியாயமா?நிலத்தை அபகரிப்பதோடு கார்ப்பரேட்டுகள் ஏரிகள்,குளம், குட்டைகள்,ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளையும் அபகரிப்பதற்கு அனுமதித்துள்ளீர்களே? விளக்கம் அளிக்க தயாரா ?
சிப்காட் அமைக்கிறோம் என்கிற பெயரில் எங்கு நிலத்தடி நீர் நிரம்ப இருக்கிறதோ, அப்பகுதி விவசாயிகள் முப்போகம்ம் விளைவிக்கும் பொன் விளையும் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க முயற்சி எடுப்பது நியாயமா? என் நிலம் எனக்கு சொந்தம் என்று மறுத்ததால் மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைத்தீர்களே நியாயமா?
தமிழ்நாட்டில் தனி பட்ஜெட் வேளாண்மைக்கு என்று சொல்லி திட்டங்களுக்கு பெயர் சூட்டுவதை மட்டுமே தனது சாதனையாக சொல்லி தன்னை பாராட்டிக்கொள்வது நியாயமா? பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கான நிதி வருவாய் பட்டியல் வெளியிட்டது உண்டா? மற்ற துறைகளின் தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களின் அதிகாரிகளை சந்தித்து பேசி திட்டங்களை பெற்று வரும் நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் வேங்கையின் மன்னன் இதுவரையிலும் மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து பேசியது உண்டா? தமிழ்நாட்டிற்கான திட்டங்களின் நிதிகளையும் கேட்டு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது உண்டா? விளக்கம் அளிக்க முடியுமா?
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 10 உதவி வேளாண்மை இயக்குனர்கள் இருக்க வேண்டிய இடத்தில், இரண்டு பேர் மட்டுமே பணியாற்றுகிறார்களே! இது தான் உழவனை தேடித்திட்டத்தின் உண்மை நிலையா? நாகை உத்தமசோழபுரம் கதவணை அமைக்கிறேன் என்று மக்களை அழிப்பதற்கு திட்டம் போடுகிறீர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடல் நீர் உட்புகுந்து பத்தாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிந்து விடும்.கடல்
முகத்துவாரத்தில் பூதங்குடியில் அமைக்க வேண்டும் என 32 கிராம மக்கள் போராடுகிறார்களே? அது குறித்து விளக்கம் அளித்தது உண்டா?மாறாக இறால் பண்ணை அதிபர்களுக்கு ஆதரவாக காவல்துறையை குவித்து இலங்கையில் முள்வேலி முற்றத்திற்குள் அடைத்து வைத்தது போல, உத்தமசோழபுரத்தை சுற்றியுள்ள மக்களை அடைத்து வைத்திருப்பது நியாயமா?
காவிரி டெல்டாவில் கடல் மட்டம் உயர்ந்து கடலில் கலக்கும் நதிகள் மூலமாக டெல்டாவிற்க்குள் கடல்நீர் உட்புகுவதை தடுக்க கடல் முகத்துவார நதிகளை சீரமைப்பதற்கு முதல் கட்ட 960 கோடி ரூபாய் 2016 ல் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் பெறப்பட்டு அரிச்சந்திரா அடப்பாறு, வளவனாறு,
பாண்டவையாறு உள்ளிட்ட நதிகள் சீரமைக்கப்பட்டது. இரண்டாவது கட்ட நிதியை பெற்று திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்ட வெள்ளநீர் திருவாரூர் மாவட்டம் வழியாக கடலில் சென்று வடியும் பாமணி ஆறு, கோறையாறு, மறைக்காகோரையாறு, பழம்பாண்டி ஆறு உள்ளிட்ட கிளை நதிகளை சீரமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டது உண்டா?
உங்கள் ஆட்சியின் விவசாயிகள் விரோத கொள்கைகளையும், பெற்று வந்த சலுகைகள் அபகரிப்புகளையும் பட்டியலிட்டு விவாதிப்பதற்கு நான் தயார். நீங்கள் நேருக்குநேர் விவாதிப்பதற்கு தயாரா? விவசாயிகள் விரோத கொள்கைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு தீர்வு காணுவதற்காக போராடும் விவசாயிகளை பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயிகள் என்று முதலமைச்சர் கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.