/tamil-ie/media/media_files/uploads/2023/06/polive.jpg)
புதிய டி.ஜி.பி யார்
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்காக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.
தமிழகத்தின் தற்போதைய சட்ட ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவி வகித்து வருகிறார். 1987ம் ஆண்டில் இவர் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார். இந்நிலையில் இவர் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி தமிழகத்தின் டி.ஜி.பியாக பதவியேற்றார். இந்நிலையில் வருகின்ற 30ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.
மாநிலங்களின் புதிய டி.ஜி.பி நியமனத்தைப் பொறுத்தவரை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்தின் ஆலோசனை பெறப்பட வேண்டும். இதன்படி டி.ஜி.பிக்கு தகுதியானவர்களின் பட்டியலை மாநில அரசு, குடிமைப்பணிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கும். அந்த பட்டியலில் 3 பேரை குடிமைப்பணிகள் ஆணையம் தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பும். இந்நிலையில் இதில் ஒருவரை மாநில அரசு நியமித்துக்கொள்ளும்.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அடுத்த டி.ஜி.பிக்கான தகுதியானோரின் பட்டியல் தமிழ்நாடு அரசு சார்பில், மத்திய குடிமைப்பணிகள் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சங்கர் ஜிவால், சஞ்சய் அரோரா, பிராஜ் கிஷோர் ரவி, ஏ. கே.விஸ்வநாதன், ஆபாஷ் குமார், ரவிச்சந்திரன், சீமா அகர்வால், அம்ரேஷ் பூஜாரி, ராஜீவ் குமார், சந்தீப்ராய் ராதோர், அபய்குமார் சிங், வன்னிய பெருமாள் உள்ளிட்ட 13 பேர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதில் தகுதியான 3 பேரை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்றனர்.
இந்நிலையில் சங்கர் ஜிவால், சஞ்சய் அரோரா, பிராஜ் கிஷோர் ரவி ஆகியோர் பெயர்கள் மத்திய தேர்வாணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவர்களில் தற்போதைய சென்னை போலீஸ் கமிஷனரான சங்கர் ஜிவாலை புதிய டி.ஜி.பி-யாக தமிழக அரசு நியமிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.