2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருக்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமையுமா? என்று கடந்த ஒருவாரமாகவே செய்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்து உள்ளோம் என்றும், கூட்டணி ஆட்சி கிடையாது என்றும் உறுதிப்பட கூறினார்.
"கூட்டணி ஆட்சியாக இருக்கும் என்று அமித்ஷா ஒருபோதும் கூறவில்லை. தவறாகப் புரிந்து விளையாட முயற்சிக்கிறீர்கள்" என்று சென்னையில் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேசிய அளவில், பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும்தான் அமித்ஷா கூறி இருந்தார் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம், எங்கள் கட்சிக்கு ஆலோசனை சொல்ல தி.மு.க-வுக்கு திராணி இல்லை என்றும் பழனிசாமி பதிலடியாக பேசினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
"அமித்ஷாவின் பேச்சு ஒருவித அதிகாரப் பகிர்வைக் குறிக்கிறது என்று நம்பிய எங்கள் தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து பல அழைப்புகள் வந்தன. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி குறித்து தெளிவாகக் கூற வேண்டியிருந்ததாக அ.தி.மு.க மூத்த தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினர்.
எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களுக்கு பா.ஜ.க தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றாலும், இதில் ஆச்சரிபடுவதற்கு எதுவும் இல்லை என்று கட்சி உள்வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் அதிகாரப்பகிர்வுடன் கூடிய கூட்டணி ஆட்சி இருந்ததில்லை. இ.பி.எஸ்ஸின் விளக்கம் எதிர்பார்க்கப்பட்டது" என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறினார். பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகையில், இந்த கூட்டணி "தந்திரோபாயம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டதல்ல" என்று கூறினார்.
2 கட்சிகளும் தேர்தல் வியூகத்தின் மீது முடிவெடுக்கின்றன. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் கோவை, சென்னையில் தி.நகர், குமரி போன்ற நகர்ப்புற தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி தொகுதி கிடைக்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. தெற்கு மற்றும் மேற்கு தமிழகத்தில் பா.ஜ.க-வின் ஆதரவு மற்றும் அதன் செயல்திறனை உயர்த்தும் என்று அ.தி.மு.க எதிர்பார்க்கிறது.
அதிமுகவில் சிலர் பாஜக கூட்டணி நீடிக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறார்கள். கூட்டணி அதன் முதல் அடிகளை எடுத்து வைத்தாலும், மெதுவாக வலுவிழக்கக் கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.
"எண்கணித ரீதியாக மட்டுமே கூட்டணி செயல்படுகிறது என்று அதிமுக மூத்த தலைவரும் இபிஎஸ் தலைமையிலான அமைச்சரவையில் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கூறினார். இது இயற்கையான கூட்டணி அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். நாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, அது நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது. அமித்ஷா - இபிஎஸ் சந்திப்பு அ.தி.மு.க-வின் வீழ்ச்சியின் தவிர்க்க முடியாத தொடக்கமாக இருக்குமோ என்று நாம் அனைவரும் அஞ்சுகிறோம். பீகாரில் நிதீஷ் குமார், மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் கர்நாடகாவில் ஜே.டி (எஸ்) ஆகியோருடன் ஒப்பிட்டு, இன்னும் 10 ஆண்டுகளில் அ.தி.மு.கவின் கதி இப்படித்தான் இருக்கும் என்பதுதான் நம் அனைவரின் கருத்து என்று அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதன் மூலம் ஆளும் தி.மு.க.-வை அதிகாரத்திலிருந்து அகற்றுவதில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, இந்த திசையை நோக்கிய முதல் நடவடிக்கையாக, பாஜக எங்களிடம் வந்துள்ளது, "என்று அவர் கூறினார். மேலும் பல கட்சிகள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.