/indian-express-tamil/media/media_files/2025/08/31/annamalai-15-2025-08-31-18-29-34.jpg)
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், இன்று காலை சென்னையை அடுத்த அக்கரையில் உள்ள ஒரு கல்சுரல் சென்டரில் தமிழக பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பா.ஜ.கவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்க உள்ளார். தமிழக பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இதில் கலந்துகொள்ள உள்ளனர். குறிப்பாக நயினார் நாகேந்திரன், குஷ்பூ, சரத்குமார் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதுதான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி முடிவுகள் மற்றும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜகவின் மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர் இந்தக் கூட்டத்தைப் பற்றி பேசுகையில், "தேர்தலுக்கு என்ன செய்யப் போகிறோம், கூட்டணி விஷயத்தில் என்ன முடிவுகள் எடுப்பது, புதிய கட்சிகளை சேர்ப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும்," என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்காத அண்ணாமலை:
இந்த முக்கியமான கூட்டத்தில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக அவரால் பங்கேற்க இயலவில்லை என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இன்று மதியம் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், அண்ணாமலை செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடந்த பாஜக உயர்நிலைக் குழு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அப்போது அவர், "அதிக திருமண நிகழ்வுகள் மற்றும் சொந்த வேலைகள் காரணமாக டெல்லி செல்ல இயலவில்லை," என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க அரசு மீது விமர்சனம்
கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சில சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், குஷ்பு சுந்தர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். "எங்களுக்கு அதிமுக உடன் எந்தவித பிரச்சனையும் இல்லை," என்று அவர் உறுதியாகக் கூறினார். மேலும், குஷ்பு சுந்தர், திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இங்கு குடும்ப அரசியல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த இளையராஜாவின் பாராட்டு விழாவில்கூட முதல்வர் குடும்பத்தினர் மட்டுமே முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாஜகவின் செயல்பாடுகள் இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டம், தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு பாஜக தயாராகி வருவதை தெளிவாகக் காட்டுகிறது. மேலும், தமிழக அரசியலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்க வந்த சரத்குமார் ஏற்கனவே அமித்ஷாவை சந்தித்தற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறியுள்ளார். அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அக். முதல் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணம் - அண்ணாமலை
அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் தழுவிய தனது சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்குகிறார். அவர் நாள்தோறும் பரப்புரை மேற்கொள்ளும் 3 ஆவது இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என பாஜக மாநில சிந்தனை கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் ஈபிஎஸ் சுற்றுப் பயணத்தில் பாஜக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். ஈபிஎஸ் பேச்சு பாஜகவை பாராட்டும் வகையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் இணைந்து கூட்டு பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர் என்று அண்ணாமலை பேசியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us