/tamil-ie/media/media_files/uploads/2017/08/justice-kirubakaran.jpg)
அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளை ஏன் ஏற்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வசிப்பதாக இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக கல்லூரிகளில் சேருவதை தடுக்கக்கோரி புதுக்கோட்டையை சேர்ந்த விக்னயா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு இனி ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 1200'க்கும் மேற்பட்ட மற்ற மாநில மாணவர்கள் தற்போது தமிழக மருத்துவ கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, நீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தபட்சம் 10 ஏழை குழந்தைகளின் கல்லூரி படிப்பு செலவுகளை ஏன் ஏற்க கூடாது என கேள்வி எழுப்பினார்.
மேலும், இது போன்று இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று மருத்துவ கல்லூரிகளில் மற்ற மாநில மாணவர்கள் சேருவதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாகவும் தெரிவித்தார்.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகிறார்கள் என்பதை ஆய்வு செய்து ஜூலை 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.