மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் மறுத்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை, டிடிவி தினகரன் ஆதரவாளரான எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டார். இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் எனவும், வெற்றிவேல் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரனின் ஆதரவாளரான எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளர் ஒருவருக்கு ரூ.6,000 என 2 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.150 கோடி பண பட்டுவாடா செய்துள்ளது. பணபட்டுவாடா நடைபெற்றது கண்கூடாக தெரிகிறது. ஆனால், இதுகுறித்து தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், அதிமுகவின் பொய் பிரச்சாரத்தை தடுக்கவும், மக்களின் சந்தேகங்களை தீர்க்கவும் மறைந்த முதலமைச்சரின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டது தவறா?”, என கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என, ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக துண்டு பிரசுரங்களை வழங்கியதாலேயே, அதனை பொறுக்க முடியாமல் ஜெயலலிதாவின் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார்.
”இந்த வீடியோ வெளியிடப்படுவது குறித்து சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஏதும் தெரியாது”, எனவும் அவர் கூறினார்.
மேலும், ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல் என பொய் சொன்னோம் என அப்பல்லோ நிர்வாக இயக்குநர் தற்போது கூறியிருப்பது, அதிமுக அரசின் மிரட்டல் காரணமாகத்தான் எனவும் தங்க தமிழ்செல்வன் குற்றம்சாட்டினார்.
“மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆதரவு இருந்து சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரனை பார்த்து அதிமுக அரசு பயப்படுகிறது”, என அவர் சாடினார்.
வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ, ஜெயலலிதா ஏற்கனவே சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டது என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டை தங்க தமிழ்செல்வன் கடும் கோபத்துடன் மறுத்தார்.