/indian-express-tamil/media/media_files/2025/10/01/chennai-construction-site-2025-10-01-16-54-29.jpg)
சென்னை விபத்தில் பலியான 9 அசாம் இளைஞர்கள் குறித்து உருக்கமான பின்னணி
வட சென்னையில் உள்ள எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல்மின் திட்ட கட்டுமானத் தளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 9 தொழிலாளர்களும், அசாம் மாநிலத்தின் கிராமங்களைச் சேர்ந்த திமாசா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளம் ஆண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் தமிழகத்தில் ஒன்றாகக் கூடி வசித்து, வேலை செய்து வந்தவர்கள்.
பொன்னேரிக்கு அருகில் அமைந்துள்ள 1,320 மெகாவாட் அனல்மின் திட்ட கட்டுமானப் பணியின்போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. தரை மட்டத்தில் இருந்து 20 அடிக்கு மேல் உயரத்தில் கான்கிரீட் வளைவை (concrete arch) கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரும்பு சாரக் கட்டு (metal scaffolding) உடைந்து விழுந்ததில், சுமார் 30 அடி உயரத்தில் இருந்து அவர்கள் கீழே விழுந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சாரோ போஜித் தாவுசென், முன்னா கெம்ப்ராய், ஃபைபிட் ஃபங்லு, பிதாயும் போர்போசா, சுமன் கரிகாப், திமராஜ் தாவுசென், தீபக் ராய்ஜுங் மற்றும் பிரயந்தோ சாரோங் (28), பவன் சாரங் (40) ஆகிய 9 பேர் அடங்குவர்.
உயிரிழந்த இரு சகோதரர்களும் விபத்து நடந்த இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வாடகை அறையில் தங்கி, கடந்த மார்ச் மாதம் முதல் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுடன் அசாம் மாநிலம் கார்பி ஆங்லாங் மாவட்டத்தின் மிசிபைலம் கிராமத்தைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்களும் அதே அறையைப் பகிர்ந்து, அதே தளத்தில் வேலை செய்தனர். அனுபவம் குறைவான புரோவிட் போன்றவர்களுக்கு மாதம் சுமார் ரூ.19,000 வரையிலும், அவரது சகோதரர் சார்போஜித் போன்ற அனுபவமுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.24,000 முதல் 25,000 வரையிலும் ஊதியம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோருக்கு அதே தளத்தில் வேலை செய்த சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் புதன்கிழமை காலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல்களைப் பெறுவதற்காகக் காத்திருந்தனர். உயிரிழந்த பிரயந்தோ சாரோங் (28)-ன் சகோதரரான ஜோய்பித்யா சாரோங் (45), "நானும் அதே தளத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறேன், ஆனால் விபத்து நடந்தபோது நான் வேறு பகுதியில் இருந்தேன். என்ன நடந்தது, எப்படி மொத்த அமைப்பும் விழுந்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை," என்று கூறினார்.
விபத்தில் இறந்த 4 பேர் அசாம் மாநிலம் ஹோஜாயில் உள்ள நபங்கா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். "எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் 80% அதிகமானோர் வேலைவாய்ப்பு இல்லாததாலும், ஊரில் குறைந்த கூலி என்பதாலும் புலம்பெயர்ந்து வெளியில் வேலை செய்கின்றனர். எங்கள் ஊரிலேயே வேலை இருந்தால் நாங்கள் ஏன் இங்கே இருக்க வேண்டும்?" என்று பவன் சாரங்கின் உறவினர் முக்திதர் ஃபங்லா கூறினார். பவன் சாரங்கிற்கு ஊரில் மனைவி மற்றும் மகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.