திருவெறும்பூர் அருகே மாமியாரிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் பறிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வராஜ். இவர் தனது மனைவி டயானா மேரி மற்றும் மனைவியின் தாய் இன்னாசியம்மாள் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது,
இதனால் மனம் வெறுத்துப் போன செல்வராஜின் மனைவி டயானா மேரியும், இன்னாசி அம்மாளும் கடந்த 5-ம் தேதி செல்வராஜ் மீது சுடு தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றியுள்ளனர்.
இதில் செல்வராஜ் உடல் முழுவதும் வெந்து போன நிலையில் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து, திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் இருவரையும் கைது செய்தனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/