Wild elephant kills 2 in Kovai: கோவை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இருர்வர் உயிரிழந்த நிலையில், காட்டுயானை கதவை உடைத்துக்கொண்டு தொழிற்சாலைக்குள் நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பன்னிமடை பகுதியில் நேற்று முன் தினம் காட்டு யானை தாக்கி அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசன் என்பவர் பலியானார். இதைத் தொடர்ந்து, தொப்பம்பட்டியைச் சேர்ந்த பிரேம் கார்த்தி மற்றும் விக்னேஷ் இரண்டு பேர் நேற்று இரவு வனப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்த காட்டு யானை பிரேம் கார்த்தியை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் விக்னேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக தப்பி உயிர்பிழைத்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் பிரேம் கார்த்தியின் உடலை மீட்டனர். காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டம், பன்னிமடை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை ஒன்று சுற்றி வருவதாக கூறப்படுகிறது. அந்த யானை இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், அந்த காட்டு யானை தொழிற்சாலை ஒன்றின் கதவை மூர்க்கமாக உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது. இந்த சம்பவம் தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காட்டு யானை ஊருக்குள் வருவது தெரிந்தால் உடனடியாக 180042425456 என்ற இலவச அழைப்பு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.