/indian-express-tamil/media/media_files/2025/11/02/mansur-alihan-2025-11-02-18-42-55.jpg)
'கல்யாணத்திற்கு 100 பவுன் நகை போடுவேன்'.. கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.1 லட்சம் வழங்கி நடிகர் மன்சூர் அலிகான் வாக்குறுதி
ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகர் வீராங்கனை கார்த்திகாவுக்கு, நடிகர் மன்சூர் அலிகான் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும், கார்த்திகா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால், அவரது திருமணத்திற்குத் தனது சார்பில் 100 பவுன் நகை அணிவிப்பதாக வாக்குறுதி அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளையோர் கபடிப் போட்டியில், இந்திய அணி இறுதி ஆட்டத்தில் ஈரான் அணியை 75-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இந்த இந்திய அணியின் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா செயல்பட்டார். அணியின் வெற்றிக்குச் சிறப்பாக விளையாடி உதவிய அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க சார்பில் ரூ.5 லட்சம் வழங்கினார். 'பைசன்' படக்குழுவினர் சார்பில் இயக்குநர் மாரிசெல்வராஜ், கார்த்திகாவின் வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, ரூ.10 லட்சம் வழங்கினார் (இதில் ரூ.5 லட்சம் கார்த்திகாவுக்கும், ரூ.5 லட்சம் கண்ணகி நகர் கபடிக் குழுவிற்கும் வழங்கப்பட்டது).
இந்த வரிசையில், நடிகர் மன்சூர் அலிகான், வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
"பெண்களுக்கு உடல்நலன் மிகவும் முக்கியம். வீரர்களுக்கு ஏதாவது சின்ன பாதிப்பு ஏற்பட்டால் கூட, ரூ.1 கோடி, ரூ.10 லட்சம் என்று நஷ்டஈடு கிடைக்கும் வகையில் இன்சூரன்ஸ் கம்பெனிகள் 'ஸ்பான்சர்ஷிப்' செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்; உதயநிதி ஸ்டாலினுடன் நான் நடித்துள்ளேன். இதை ஒரு கருணை மனுவாக எடுத்துக்கொண்டு, அடித்தட்டு மக்கள் மேலே வரும்போது அவர்களுக்கு உதவ வேண்டும்.
தமிழகத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அரசியல் கலப்பில்லாத ஒரு கபடி கட்டமைப்பை உருவாக்க வேண்டும். மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (Vinesh Phogat) தங்கம் பறிபோனதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. (அவர் குறித்து) 'சிரித்தால் கூட உடல் எடை அதிகரிக்கும்' (என்றெல்லாம் விமர்சித்தனர்). அவர் தங்கம் பெற நம் நாடே உதவவில்லை. இது (ஆசிய கோப்பை) இவர்களுக்கான வெற்றி இல்லை; இனி தான் அவர்கள் சாதிக்க வேண்டும். இது 2025 தான், அடுத்த ஒலிம்பிக்கில் கபடியைக் கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும்," என்றார்.
தொடர்ந்து கார்த்திகாவிடம் பேசிய அவர், "நீ ஒலிம்பிக்கிலும் ஜொலிக்க வேண்டும். உன் கல்யாணத்தில் நான் 100 பவுன் நகை போடுகிறேன். நீ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று வர வேண்டும்," என்று வாக்குறுதி அளித்தார். மேலும், கார்த்திகாவின் பயிற்சியாளரையும் ('இளம் வித்தாகர்') பாராட்டிய மன்சூர் அலிகான், தமிழக அரசு கார்த்திகாவிற்கு ரூ.10 கோடியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
"வள்ளலார் வாடிப்போவார்" - அரசுக்கு விவசாய கோரிக்கை: கபடி வீராங்கனையை பாராட்டிய பின், மன்சூர் அலிகான் அரசுக்கு மற்றொரு கோரிக்கையையும் வைத்தார். "நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து முளைத்து விடுகின்றன. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலார் வாழ்ந்த பூமி இது. இதை அவர் பார்த்தால் ரொம்ப வாடிப்போவார். எனவே, தமிழ்நாடு முழுவதும் தேவையான இடங்களில் பெரிய குடோன்கள் (Godowns) கட்டப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us