ஐ.ஏ.எஸ் அதிகாரியான எஸ். செந்தாமரை, தனது உயர் அதிகாரியால் அவமானப்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், இதுவரை கையாண்ட ‘சினிமா’ விவகாரத்தை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்திலிருந்து வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு மாற்றிய அரசாணையை எதிர்த்துள்ளார்.
இந்த மனு குறித்து தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், வருவாய்த் துறை செயலர், பொதுச் செயலர் ஆகியோர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜே.ரவீந்திரன், சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.ரவிச்சந்தர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி அப்துல் குத்தோஸ் உத்தரவிட்டுள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நில நிர்வாக ஆணையர் எஸ். நாகராஜனுக்கு பிப்ரவரி 9-ம் தேதிக்குள் திருப்பி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ். செந்தாமரை தனது மனுவில் கூறியிருப்பதாவது: தான் ஆகஸ்ட் 2021-ல் நில நிர்வாக (சினிமா மற்றும் நீர்ப்பாசனம்) இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் இணைச் செயலாளராகப் பணியாற்றியதாக கூறியுள்ளார். அவர் புதிய துறையில், 1955-ன் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் 1957-ன் தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகளின் கீழ் அவர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருந்தார்.
நாகராஜன் கடந்த ஆண்டு தனது அறையில் துறையின் இரண்டாம் நிலை அதிகாரிகளுடனான கூட்டத்தின்போது தன்னை அவமதித்ததாக அவர் குற்றம் சாட்டினார். கன்னியாகுமரியில் ஜாய் எஸ்.ஏ. ராஜாவுக்குச் சொந்தமான திரையரங்கின் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான கோப்பு காலதாமதம் ஆனதற்கு அவர் கோபமடைந்ததாகவும், கோப்பில் இருந்ததால் அதைப் பார்க்க நேரம் தேவை என்ற தனது விளக்கத்தைக் அவர் கேட்க விரும்பவில்லை என்றும் கூறினார். இந்த கோப்பு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
நில நிர்வாக இணை ஆணையராக நாகராஜன் பணியாற்றியபோது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது உரிமத்தை புதுப்பிக்க மறுத்துவிட்டதாக, நாகராஜன் அவர்களே இந்த கோப்பை சமர்ப்பித்ததாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். நில நிர்வாக இணை ஆணையர் நாகராஜன் தன்னை தனது அலுவலக அறையை விட்டு வெளியேறச் சொன்னதாகவும், தனது அறையை பூட்டி வெளியே நிற்க வைப்பதாகவும் எச்சரித்ததாகவும் அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தாமரை மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
“ஜாய் எஸ்.ஏ.ராஜா தொடர்பான சினிமா உரிமம் புதுப்பித்தலில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நான் ஏற்காததால், ஒரு மனுஷியாவும் ஒரு பெண்ணாகவும் அரசாங்கப் பதவியை வகிக்கும் நான் நாகராஜனால் அவமானப்படுத்தப்பட்டேன்.” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுதாரர் ஜனவரி 10-ம் தேதி தலைமைச் செயலாளரிடம் இந்தப் பிரச்னை குறித்து புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.
பிப்ரவரி 3-ம் தேதி, நில நிர்வாக ஆணையர், மனுதாரர் கையாளும் சினிமா மற்றும் நீர்ப்பாசனம் உட்பட அனைத்து விவகாரங்களையும் அந்த துறையின் கூடுதல் ஆணையருக்கு மாற்றுவதற்கான அலுவலக உத்தரவை நிறைவேற்றினார். இதனால், கோபமடைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிப்ரவரி 4-ம் தேதி தலைமைச் செயலாளரிடம் ஆணையர் ஆவேசமான நடத்தையை வெளிப்படுத்துவதாகவும், தன்னை வார்த்தைகளால் திட்டியதாகவும் புகார் அளித்தார்.
இதையடுத்து, அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நவம்பர் 28-ம் தேதி சினிமா தொடர்பான மொத்த விஷயங்களையும் நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசாங்க உத்தரவின் சட்டப்பூர்வ தன்மையை ஆட்சேபித்து, மனுதாரர், அத்தகைய இடமாற்றம் 1955 சட்டத்தை மீறும் நடவடிக்கை என்றும் பழிவாங்கும் மனப்பான்மையின் விளைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திரையரங்குகள் தொடர்பான 1957 விதிகள் ‘நில நிர்வாக இணை ஆணையர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவதாகவும், எனவே சட்டப்பூர்வ விதிகளைத் திருத்தாமல், சினிமாவை வெறுமனே வருவாய் நிர்வாக ஆணையருக்கு மாற்ற முடியாது என்றும் மனுதாரர் கூறினார். வருவாய் நிர்வாக ஆணையரிடம் தனக்கு இடமளிக்கக்கூடிய எந்த ஒரு பணியிடமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதவிக்கு நிதி அனுமதி இல்லாததால், தனது சம்பளம், நிர்வாகக் கட்டணம் மற்றும் தற்செயல் ஆகியவற்றைப் பெறுவதற்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். “உடனடியாக அமலுக்கு வரும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையரிடம் பணிபுரியும்படி எனக்கு உத்தரவிடப்பட்டது. இது எனது சம்பளத்திற்கான எந்த ஏற்பாடும் இல்லாமல், எனது வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதற்கான எனது அடிப்படை உரிமையை மீறுவதாகவும், எனக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் இருந்து எனது உத்தியோகபூர்வ பணிகளைச் செய்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது” ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தாமரையின் மனுவில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"