திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கடந்த மாதம் 11-ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றார். சுபஸ்ரீயை கடந்த 18-ம் தேதி அழைத்து வர கணவர் பழனிகுமார் சென்றபோது சுபஸ்ரீ ஈஷாவில் இருந்து மாயமானது தெரிய வந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுபஸ்ரீ சாலையோரம் ஓடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து பழனிகுமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று செம்மேடு பகுதி, விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சுபஸ்ரீ உடல் சடலமாக மீட்கப்பட்டது. கோவை அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வு அறிக்கையில், நுரையீரலில் நீர் இறங்கியுள்ளதாகவும், அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கோவை தெற்கு வட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைத்துள்ளது.

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் காவல்துறையால் மறைக்கப்படுகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. ஆகவே இது குறித்து தமிழக அரசு தனி கவனம் செலுத்தி விசாரணை மேற்கெள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை