/indian-express-tamil/media/media_files/2025/02/13/8nrjNIEzUqXNPW2Ibe6s.jpg)
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி
சென்னை காவல் துறையில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக பணிபுரிந்த ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ் குமார் மீது போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியாக சில தினங்களாக தனக்கு தொந்தரவு கொடுப்பதாக அந்த பெண் காவலர் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, பெண் காவலரின் புகாரின் அடிப்படையில் டிஜிபி உத்தரவின் பேரில் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் விசாகா கமிட்டி நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் காவலர் கொடுத்த புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்ததையடுத்து முதல் கட்ட விசாரணை அறிக்கையும் டிஜிபி அலுவலகத்தில் விசாகா கமிட்டி சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார் ஐபிஎஸ் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ் குமார் ஐபிஎஸ் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த நிலையில் தற்போது டிஐஜி பதவியில் இருப்பதாகவும் இதற்கு முன்பு சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து இணை ஆணையராக இருந்த நிலையில் சமீபத்தில் வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த சில நாட்களாகவே இணை ஆணையர் மகேஷ் குமார் மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் மற்றொரு பெண் அதிகாரியும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.