இளம் மாணவ- மாணவிகளுக்கு புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டால் உள்ள தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது அவசியமாக இருப்பதாக கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் "Children Charitable Trust" பெண் குழந்தைகள் இல்லத்தில் புகையிலை தடுப்பு தினத்தை முன்னிட்டு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (மே 28) நடைபெற்றது. இதில் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள் புகையிலை மற்றும் போதை ப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிலிருந்து வெளிவருவது குறித்தும் தத்ரூப நாடகம் மற்றும் நடனங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தற்போது திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன்பாக காட்சியிடும் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த காட்சியில் காட்டப்படும் படங்கள் மிகுந்த பயத்தை ஏற்படும் வகையில் இருப்பதாக சிலர் தெரிவிப்பதாகவும்
ஆனால் அது போன்ற பயத்தை ஏற்படும் காட்சிகளை சிறுவயது மாணவர்கள் பார்ப்பதால் புகையிலை பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதாக சுட்டிக்காட்டினார்.
/indian-express-tamil/media/media_files/WugMpoPlH4h83KQrDf32.jpeg)
மேலும் போதைப் பொருள் மற்றும் புகையிலை பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்பட்ட நோயாளிகள் படும் துன்பங்களை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மாணவர்கள் பார்ப்பது கூட ஒரு வகையில் விழப்புணர்வு ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
போதைப் பொருட்களை ஒழித்தாலே குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளதாக கூறிய அவர் போதைப் பொருட்கள் பழக்கம் அதனை தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது என ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப் பொருட்களை ஒழித்தாலே குற்றம் குறைவதோடு உடல் நலனும் நன்றாக இருக்கும் எனவும் புகையிலை ஒழிப்பு தின விழப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் அதிகம் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி நிர்வாகி, கௌரி உதயந்திரன், மருத்துவர்கள் ஹேமா, விஷ்ணு மற்றும் கோவை புதூர் குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் ஜீவானந்தம், குணசீலன் மற்றும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“