உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு நேர்க்காணலில், நாட்டில் நிலவும் அரசியல் பிரச்னைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
அப்போது, இந்தி எதிர்ப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த யோகி ஆதித்யநாத், “வாக்கு வங்கி குறைந்துவிட்டதாக உணர்ந்ததால், முதல்வர் ஸ்டாலின் மொழி அடிப்படையிலான பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறார். மொழி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்தக் கூடாது. காசி - தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். சமஸ்கிருதத்தைப் போல தமிழின் வரலாறும் பழமையானது. இந்திய பாரம்பரியத்தின் கூறுகள் தமிழில் இருப்பதால், ஒவ்வொரு இந்தியருக்கும் தமிழ் மீது மரியாதை உண்டு. பிறகு ஏன் இந்தியை வெறுக்க வேண்டும். மொழி ஒன்றிணைக்க மட்டுமே வேலை செய்யும், பிரிவினைக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இருமொழிக் கொள்கை மற்றும் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கிறது. இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன் எதிரொலியாக பா.ஜ.க. தலைவர்களின் நேர்காணல்கள் உள்ளது.
இப்போது யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல, முழுக்க முழுக்க அரசியலின் உச்சகட்ட அவல நகைச்சுவை. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் ஆதிக்கத்தை மட்டும் எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என்று கூறியுள்ளார்.