மருத்துவ துறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக கோவையில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
Advertisment
கோவை கொடிசியா வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக இந்திய இரைப்பை குடல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் இருபதாவது மாநாடு நடைபெற்று வந்தது.
இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகள் குறித்தும் தொழில் நுட்பம் குறித்தும் விவாதிக்கப்பட்டு பல்வேறு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் இந்திய மருத்துவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்து ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மருத்துவ துறையில் உள்ள நவீன சிகிச்சை முறைகள், தொழில் நுட்பங்கள் குறித்து, வளரும் இளம் தலைமுறை மருத்துவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு வாயிலாக பயிற்சிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாநாட்டின் இறுதியில் இந்தியா முழுவதும் இருந்து இதில் கலந்துகொண்டு அறுவை சிகிச்சை சம்பந்தமான பட்டப்படிப்பை முடித்த மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி பாராட்டு சான்றிதழ்களும் பட்டங்களும் வழங்கினார்.
இது குறித்து மாநாட்டிற்கு தலைமை வகித்த பேசிய மருத்துவர் தங்கவேலு கூறியதாவது, இந்தியா முழுவதும் மொத்தம் 27 இடங்களில் லேப்ராஸ்கோப்பி கருவியின் மூலமாக நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பயிற்சியானது நடத்தப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் புதுப்புது தொழில் நுட்பங்கள் வருகின்றது, புதுப்புது எந்திரங்களும் வருகின்றது. அதற்கான திறனை மேம்படுத்துவதற்காக தான் இந்த அறுவை சிகிச்சை பயிற்சி கொடுத்து வருகின்றோம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டங்களை பெற்றுள்ளனர்.
இந்திய முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 1200 மருத்துவர்கள் தற்பொழுது பட்டங்களை பெற்றுள்ளனர். மருத்துவ துறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. விரைவில் எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வசதி கட்டாயம் வந்தே தீரும் என தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil