/tamil-ie/media/media_files/uploads/2023/03/cor.jpg)
திருச்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் அதுவும் திருச்சியில் திருச்சி மாநகரில் வெகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது குறித்த விபரம் வருமாறு;
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் 36 ஆகவும், திருச்சியில் பாதிப்பு 6 ஆகவும் இருந்தது. இருப்பினும் கடந்த ஒரு வருடமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்நிலையில், திருச்சி சிந்தாமணி பகுதி பூசாரி தெருவைச் சேர்ந்த உதயகுமார் (27) என்பவர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பே, அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியதால், அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறுகையில், பெங்களூருவில் பணியாற்றி வந்த உதயகுமார், அண்மையில் நண்பர்கள் 3 பேருடன் கோவா சென்றுவிட்டு திரும்பியுள்ளார். இதனால், உதயகுமார் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரும் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், உயிரிழந்த உதயகுமாரின் உடல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்றார்.
முன்னதாக திருச்சியில் பல்வேறு இடங்களிலும் மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.